பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க முயலுமா அரசு?

பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்தவர்களை அப்புறப்படுத்தி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க முயலுமா அரசு? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீமான்
சீமான்

சென்னை: பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்தவர்களை அப்புறப்படுத்தி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க முயலுமா அரசு? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது 

சென்னை, அண்ணாசாலையில் இருக்கும் சத்தியவாணி முத்து நகரில் வசித்து வருகிற மண்ணின் மக்களை அவர்களின் விருப்பத்திற்கும், உணர்வுக்கும் மாறாக வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி அகற்றி சென்னைக்கு வெளியே ஒதுக்குபுறமாகத் தள்ள முனையும் தமிழக அரசின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது. சென்னையின் பூர்வக்குடி மக்களை அவர்களது வாழ்விடத்தைவிட்டு முழுவதுமாக வெளியேற்றி அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்க முனைகிற கொடுஞ்செயலைத் தமிழக அரசு தொடர்ச்சியாகச் செய்துவருவது மிகப்பெரும் கொடுஞ்செயலாகும். மண்ணின் மக்களுக்கு எதிரான இவ்வகைச் செயல்கள் யாவும் மக்களாட்சித் தத்துவத்திற்கே எதிரான மாபாதகமாகும்.

காலங்காலமாக வாழ்ந்து வருகிற மக்களை, ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ எனக்கூறி அப்புறப்படுத்த முனைகிறது அரசு. ஆதித்தமிழர்களுக்கென வெள்ளையர் காலத்தில் அளிக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் அவர்கள் வசம் இருந்திருந்தால் அவர்கள் ஏன் இந்நிலத்தில் வாழப் போகிறார்கள்? இம்மக்களை ஆக்கிரமிப்பாளர்களென்று கூறி அவர்களது குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்துகிற அரசு, அதே போல பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்தவர்களையும் அப்புறப்படுத்தி அந்நிலங்களை மீட்டெடுத்து உரியவர்களிடம் ஒப்படைக்க முயலுமா? எனும் கேள்விக்கு இதுவரை பதிலிலில்லை. மாற்றுக்குடியிருப்புகளையும், வாழ்வாதாரத்திற்கான பொருளாதார வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தராது நிலத்தைவிட்டு அம்மக்களை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்துவது அப்பட்டமான மக்கள் விரோதமாகும்.

இந்நிலையில் சத்தியவாணி முத்து நகர் மக்களையும் அங்கு கொண்டு செல்வது வதை முகாமில் அடைப்பது போன்றதாகும். இதனை வலியுறுத்தியே அம்மக்கள் தங்களது வெளியேற்றத்திற்கெதிராகப் போராடியிருக்கிறார்கள். அவ்வாறு போராடியவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டதோடு, அதற்கெதிராகக் களத்தில் நின்ற தம்பி இசையரசு போன்றவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டிருப்பது காட்டுமிராண்டித்தனமானது. அத்தகையத் தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

சத்தியவாணி முத்து நகரில் படிக்கும் பிள்ளைகளின் படிப்பிற்காக மக்களின் குடியிருப்புகள் அகற்றப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாகத் தமிழக அரசு கூறியிருந்தாலும் இது போதுமானதல்ல! வீடுகளை இடித்து அவர்களை வெளியேற்றும் பணியினை முழுமையாகக் கைவிட்டு, அவர்களது வாழ்விடத்திற்கு அருகாமையிலே மாற்றுக்குடியிருப்புகளை ஏற்படுத்தித் தந்து அவர்களது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசைக் கோருகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com