உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு போதிய ஒதுக்கீடு தராதது வருத்தமளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு திண்டிவனத்தில் பாமக சிறப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அன்புமணி ராமதாஸ், 'அதிமுக கூட்டணியில் உள்ளாட்சித் தேர்தலில் பாமகவுக்கு போதிய ஒதுக்கீடு தராதது வருத்தமளிக்கிறது. எதிர்வரும் தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் தரவேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இந்தக் கூட்டத்தில், கட்சி சார்பில் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும், தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை செயல்படுத்தக் கூடாது, தமிழகத்தில் இட ஒதுக்கீடு அளவை அதிகரிக்க வேண்டும், அதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.