கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் வெள்ளிக்கிழமை காவல் துறையினரின் பாதுகாப்புடன் மேற்கொண்ட பராமரிப்புப் பணிகள் குறித்து விளக்கம் கேட்க வந்த மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் உள்பட இருவரை போலீஸôர் கைது செய்தனர்.
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி ஆய்வால் நிலத்தடி நீர் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் 20 மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தொடர்புடைய இடத்தில் ஓஎன்ஜிசி அலுவலர்கள் பராமரிப்புப் பணி மேற்கொள்வதற்காக வெள்ளிக்கிழமை வந்தனர். இவர்களுக்கு திருவிடைமருதூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் போலீஸôர் பாதுகாப்பு அளித்தனர்.
இதனால், அப்பகுதி மக்களிடம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விளக்கம் கேட்க வந்த மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தலைமையில் வந்த மக்கள் பணியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், ஜெயராமன் தரப்பினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ஜெயராமன், திமுக கிளைச் செயலர் ராஜூவை போலீஸôர் கைது செய்தனர்.
இதுகுறித்து கதிராமங்கலம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தது:
இதுபோன்ற பராமரிப்பு பணியின்போது பல விதமான ரசாயனங்கள் உள்ளே செலுத்தப்படுகிறது. இதனால் குடிநீர் முற்றிலும் சுகாதாரம் இல்லாமல் கிடைக்கும் நிலை ஏற்பட்டு ஓஎன்ஜிசியால் ஒட்டுமொத்த மக்களும் அழியும் நிலை உருவாகியுள்ளது. பேராசிரியர் ஜெயராமன், ராஜூ இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஓஎன்ஜிசி பணிகளை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்தினருடன் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.