சென்னை: தமிழக அரசியலில் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் போன்ற நிறைய சின்னத்தம்பிகள் இருக்கின்றனர். ஆனால், 2 சின்னத்தம்பிகளும் ஆட்சி அமைக்க முயற்சிப்பது நடக்காது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணி, தேர்தல் விவகாரத்தில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவது தான் அதிமுக. மக்களவைத் தேர்தல் பணிகள் அதி விரைவு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. பிற கட்சிகளுக்கு முன்னதாகவே மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை பெறவுள்ளதும் அதிமுக தான் என்றார்.
மேலும், அரசியலில் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் போன்ற நிறைய சின்னத்தம்பிகள் இருக்கின்றனர். அரசியலில் 2 சின்னத்தம்பிகளும் ஆட்சி அமைக்க முயற்சிப்பது நடக்காது. மு.க.ஸ்டாலினையும், டிடிவி தினகரனையும் சின்னத்தம்பி யானையுடன் ஒப்பிட்டுப் பேசிய ஜெயகுமார், கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் பார்த்தார்களாம். எடுப்பது பிச்சை ஏற நினைப்பது பல்லக்கு உள்ளிட்ட பழமொழிகளை கூறியும் விமர்சித்தவர், காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பது போல் அதிமுக மீது அனைவரும் குறைகூறுவது வாடிக்கையாகிவிட்டது. திமுக எப்போதும் இரட்டை குதிரையில் சவாரி செய்யும் என்றார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி என்னுடைய நண்பர்; பண்பாடு கருதி அவருக்கு எனது வாழ்த்துக்கள் என கூறினார் ஜெயகுமார்.