தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பிற பணியாளர்களின் அசல் சான்றிதழ்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அண்ணா பல்கலைக்கழகம், தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத
பணியாளர்களின் அசல் சான்றிதழ்களை சம்பந்தப்பட்டவர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் உத்தரவின் அடிப்படையில் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைத்தால் பேராசிரியர்கள் வேறு கல்லூரிகளுக்கு பணிக்குச் செல்ல நேரிடும். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். மேலும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்யும் போது அந்த கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களின் அசல் கல்வி சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தியாவில் 8 மாநிலங்களில் 50 ஆயிரம் பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றி வருவதாகவும், சுமார் 9 ஆயிரத்துக்கும் அதிகமான போலி பணியாளர்கள் பணியாற்றுவதாகவும் அறிக்கை வெளியாகி உள்ளது. எனவே பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர் உள்ளிட்ட பணியாளர்களின் அசல் சான்றிதழ்களை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடும் அதிகாரம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கிடையாது. எனவே அசல் சான்றிதழை ஒப்படைப்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்துள்ள உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த மனு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் இரண்டு வார காலத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.