மீண்டும் அரியர்' முறை: அண்ணா பல்கலை. ஆட்சிக் குழுவும் ஒப்புதல்: துணைவேந்தர் சூரப்பா

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் அரியர் நடைமுறையை அறிமுகம் செய்வதற்கு பல்கலைக்கழக ஆட்சிக் குழுவும் ஒப்புதல் அளித்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கூறினார்


பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் அரியர் நடைமுறையை அறிமுகம் செய்வதற்கு பல்கலைக்கழக ஆட்சிக் குழுவும் ஒப்புதல் அளித்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கூறினார்.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு 2017-ஆம் ஆண்டு புதிய கல்வித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதோடு,  விருப்பப் பாடத் தேர்வு முறையும் (சிபிசிஎஸ்) அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மூலம், மாணவர்கள் துணைப் பாடங்களில் (எலெக்டிவ்) தாங்கள் விரும்பும் வேறு பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்க முடியும். ஒரு துணைப் பாடத்தை தங்கள் துறை சாராத, வேறு துறை பாடம் ஒன்றை எடுத்தும் படிக்க முடியும். மேலும், இந்த புதிய கல்வித் திட்டத்தின்படி, அரியர் முறை ரத்து செய்யப்பட்டது. அதாவது ஒரு பருவத் தேர்வில் பாடங்களில் தோல்வியடையும் மாணவர், அடுத்து வரும் தேர்வில் அவர் தோல்வியடைந்த தேர்வை எழுத முடியாது. மீண்டும் அந்தப் பாடத்துக்கான தேர்வு எந்தப் பருவத்தில் வருகிறதோ அப்போதுதான் எழுத முடியும். அவ்வாறு எழுதும்போது அக மதிப்பீடு (இன்டர்னல்), புற மதிப்பீடு (எக்ஸ்டர்னல்) இரு தேர்வுகளையும் எழுதுவது கட்டாயமாகும்.
மாணவர்கள் போராட்டம்: இந்த புதிய நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 300-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை அண்மையில் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். 2017 கல்வித் திட்ட நடைமுறைகளைக் கைவிடவேண்டும் என வழியுறுத்தினர். அப்போது, மாணவர்களின் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பல்கலைக்கழக கல்விக் குழு கூட்டத்தில், மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப மீண்டும் அரியர் நடைமுறையை அறிமுகம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. 
இந்த முடிவுக்கு பல்கலைக்கழக ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்ததும், இந்த முடிவு நடைமுறைக்கு வந்துவிடும் எனவும் பல்கலைக்கழக பதிவாளர் குமார் கூறியிருந்தார்.
அதன்படி, பல்கலைக்கழக ஆட்சிக் குழு புதன்கிழமை கூடியது. இதில், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் அறியர் நடைமுறையை அறிமுகம் செய்யும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கூறியது:-
ஏற்கெனவே கல்விக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்திருக்கிறது. எனவே, பொறியியல் மாணவர்கள் இனி அரியர் தேர்வு எழுத காத்திருக்க வேண்டியதில்லை. அவர்கள் ஒரு பருவத் தேர்வில் வைக்கும் அரியர் தாள்களை, அடுத்து வரும் பருவத் தேர்விலேயே எழுதலாம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com