கொடுங்கையூர், பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் இடங்களைச் சுத்திகரிப்பு செய்து அந்த இடங்களை மீட்டெடுப்பதற்கும், கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் அலகினை ஏற்படுத்துவதற்காகவும் ரூ.5,259 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தம் என்று நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது: பெரு நகர சென்னை மாநகராட்சிக்கான விரிவான திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. 8 மண்டலங்களில் 2 தொகுப்புகளாக திடக் கழிவுகளைச் சேகரித்துக் கொண்டு செல்வதற்கான திட்டத்தை ரூ.1,546 கோடி செலவில் செயல்படுத்துவதற்கு அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது.
கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் இடங்களை சுத்திகரிப்பு செய்து, அந்த இடங்களை மீட்டெடுப்பதற்கும், கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் அலகினை அமைப்பதற்கான திட்டத்தை அரசு - தனியார் பங்களிப்பு முறையில் ரூ.5,259 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்தத் திட்டத்துக்கு அரசு விரைவில் அனுமதி அளிக்கும். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்காக ரூ.18,701 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.