கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையோரில் கடந்த வெள்ளிக்கிழமை உதகை நீதிமன்றத்தில் ஆஜராகாத தீபு, பிஜின் ஆகியோர் கேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய 10 குற்றவாளிகள் தொடர்பான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் முக்கிய குற்றவாளிகளான சயன், மனோஜ் ஆகியோருடன் இவ்வழக்கில் தொடர்புடைய தீபு, பிஜூ ஆகியோரும் நேரில் ஆஜராகவில்லை. இதனால் நீலகிரி மாவட்ட நீதிபதி வடமலை இவர்கள் நால்வருக்கும் பிடி வாரண்டு பிறப்பித்ததோடு, இந்த வழக்கை வரும் 18ஆம் தேதிக்கும் ஒத்திவைத்தார்.
இதைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தத் தனிப்படைகள் கேரளத்தில் முகாமிட்டிருந்தன.
இந்நிலையில் தீபு, பிஜின் ஆகியோர் கேரள மாநிலம், பாலக்காடு அருகே ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் உதகை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ராஜவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், பிடிபடாத முக்கிய குற்றவாளிகளான சயன், மனோஜ் ஆகியோரைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.