புதுவைக்கு குந்தகம் விளைவிக்க பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் கிரண் பேடியுடன் இணைந்து, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி கூட்டுச் சதி செய்துள்ளதாக புதுவை முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:
எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமியை மோடியின் தம்பி என நான் கூறியதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதற்காக நான் அவரை வாழ்த்துகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லாததைப் போல, புதுவையில் ரங்கசாமி முதல்வராக இருந்த போதும் சீரான வளர்ச்சி இல்லை.
அரசு ஊழியர்கள் ஊதியமின்றி, வீதிகளில் நிற்பதற்கு அவர்தான் காரணம். கடந்த இரண்டரை ஆண்டுகளாக எதிர்க்கட்சித் தலைவர் காணாமல் போய்விட்டார்.
பிரதமர் மோடி, புதுவை மாநிலத்துக்கு நிதி வழங்காததற்கும், ஆளுநர் கிரண் பேடி ஆட்சிக்கு தொந்தரவாக இருப்பதற்கும் ரங்கசாமிதான் காரணம். அவர் கூறித்தான் புதுவைக்கு நிதி வழங்கப்படவில்லை.
பிரதமரும், ஆளுநரும், எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமியும் கூட்டாளிகள். புதுவைக்கு குந்தகம் விளைவிக்க ரங்கசாமி கூட்டுச் சதி செய்கிறார்.
பஞ்சாலைகள், கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க சட்டப்பேரவையில் ரூ. 326 கோடியை ஒதுக்கியும், அதை விடுவிக்க ஆளுநர் அனுமதி தரவில்லை. கடந்த டிச. 4-ஆம் தேதி தில்லியில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் அல்லாத அனைத்து மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து புதுவை மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தினோம். ஆனால், என்.ஆர்.காங்கிரஸ் இதில் கலந்து கொள்ளவில்லை என்றார்.