ஒரு நபர் மட்டுமே உள்ள குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் நிறுத்தப்படவில்லை என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி, கன்னியாகுமரி உள்பட பல மாவட்டங்களில் ஒரு நபர் மட்டுமே உள்ள குடும்ப அட்டைகள் ரத்தாகியுள்ளன. கணவனை இழந்தோர், கணவனால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளோர் பிள்ளைகளின் துணையின்றி தனியாக உள்ளனர். அவர்களின் இருப்பிடத்தை உறுதி செய்து அவர்களுக்குப் பொருள்களை அளிக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு பொருள்களை அளிப்பதில்லை என்றார்.
இதற்கு, உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அளித்த பதில்:
ஒரு நபரின் பெயர் மட்டுமே உள்ள குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் நிறுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல. இதுகுறித்து தமிழக முழுவதும் கள ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 33 ஆயிரம் குடும்ப அட்டைகளில் ஒருநபரின் பெயர் மட்டுமே இருப்பது தெரிய வந்தது. ஆனாலும், அந்த அட்டைகளுக்கு பொருள்கள் ஏதும் நிறுத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.