சின்னத்தம்பி யானைக்கு இயற்கை உணவுகளை கொடுத்து ஏன் காட்டுக்குள் அனுப்பக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற தடை கோரியும், அதை பிடித்து முகாமில் வைத்து பராமரிக்க உத்தரவிட கோரிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சின்னத்தம்பி யானையை முகாமுக்கு அனுப்புவது தொடர்பாக, நாளை விரிவான விளக்கம் அளிக்கப்படும என்றும் எனவே வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும் யானைகள் நிபுணர் அஜய் தேசாய் நாளை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சின்னத்தம்பி யானைக்கு இயற்கை உணவுகளை கொடுத்து ஏன் காட்டுக்குள் அனுப்பக் கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி யானையின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார். பின்னர் வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.