வருசநாடு அருகே காட்டு யானை தாக்கி விவசாயி சாவு
By DIN | Published on : 13th February 2019 01:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

தேனி மாவட்டம், வருசநாடு அருகே திங்கள்கிழமை நள்ளிரவு தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த விவசாயியை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
வருசநாடு அருகே மேகமலை வனச்சரகத்துக்கு உள்பட்ட அரசரடி மலை கிராமத்தில் நூற்றுக் கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேகமலை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இக்கிராமத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.
இந்நிலையில் அரசரடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாயி (58), திங்கள்கிழமை நள்ளிரவில் தனது தோட்டத்தில் பயிரிட்டுள்ள அவரை செடிக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டுயானை அவரை விரட்டி தாக்கி, மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே மாயி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து செவ்வாய்க்கிழமை காலை அங்கு சென்ற மேகமலை வனத்துறையினர் மாயி சடலத்தை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து மேகமலை வனத்துறையினர் மற்றும் வருசநாடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த விவசாயியை யானை தாக்கி கொன்ற சம்பவம் அரசரடி கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.