உலகம் முழுவதும் பிப்.14 (வியாழக்கிழமை) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒசூரிலிருந்து 2.5 கோடி ரோஜா கொய் மலர்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த வாய்ப்பினால் ஒசூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பகுதியில் இருந்து காதலர் தின விழா கொண்டாட்டத்தையொட்டி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஜெர்மனி, பிரேசில், மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகள் மற்றும் அரபு நாடுகளுக்கும் ரோஜா மலர்கள் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
ஒசூர், தளி , தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய வட்டங்களில் தட்பவெப்ப நிலை காரணமாக இப் பகுதியில் ரோஜா மலர்களை அதிக அளவில் உற்பத்தி செய்து வருகின்றனர். பசுமைக் குடில் அமைத்து சுமார் 2,000 ஹெக்டேர் பரப்பளவில் ரோஜா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப் பகுதியில் விவசாயிகள் மட்டுமன்றி, தனியார் நிறுவனங்களும் ரோஜா உற்பத்தியில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்
குறிப்பாக, காதலர்கள் அதிகம் விரும்பும் சிவப்பு ரோஜாக்கள் இங்கு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு தாஜ்மஹால், நொப்ளஸ், பர்ஸ்ட் ரெட், கிரான்ட்காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட வகைகளில் ரோஜா மலர்கள் உற்பத்தியாகின்றன. இங்கு ரோஜா மலர்களை அதிகளவில் உற்பத்தி செய்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தினம் ஆகிய விழாக் காலங்களில் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
நிகழாண்டு பனியின் தாக்கத்தால் உற்பத்தி குறைந்து இருந்தாலும், ஏற்றுமதி மூலம் நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சாதாரணமாக 20 பூக்கள் கொண்ட ஒரு பஞ்ச் ரூ.20 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது 20 ரோஜா மலர்கள் கொண்ட பஞ்ச் சுமார் ரூ.300 வரை உள்ளூர் சந்தையில் விற்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக ஒரு கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்று விவசாயிகள் தெரிவித்தனர்.