தேனி மாவட்டம், போடி குரங்கணியை அடுத்துள்ள கொழுக்குமலை-திப்பெடா வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான பயணம் மேற்கொண்டதையடுத்து, அப்பகுதியில் தேனி மாவட்ட வனத்துறையினர், காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11-ஆம் தேதி கொழுக்குமலைப் பகுதியில் அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சி மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள் 23 பேர் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தனர். அதையடுத்து இப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கேரள சுற்றுலாத்துறையினர் கொழுக்குமலை பகுதிக்கு ஜீப் மூலம் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி வழங்கியுள்ளனர். இதில் கொழுக்குமலைப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருகில் உள்ள திப்பெடா மலைப்பகுதிக்கும் சென்று வருகின்றனர். இது மலை உச்சியில் உள்ள ஆபத்தான பகுதி.
மேலும், தற்போது காட்டு தீ ஏற்படும் காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளதாகக் கூறி, கொழுக்குமலை தனியார் தேயிலை தோட்ட மேலாளர் ஜானி, தேனி மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமியிடம் திங்கள்கிழமை மனு அளித்தார். அதையடுத்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் தேனி மாவட்ட வன அலுவலர் கெளதமன் தலைமையில் வனத்துறையினர் கொழுக்குமலை, திப்பெடா பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். அவர்களுடன் குரங்கணி காவல் சார்பு ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவலர்கள் சென்றனர். ஆய்வுக்குப் பின், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.