தமிழர்களின் நாகரிகம், பண்பாட்டை அறிய முயல்வதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனு:
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிவகளை பரம்பு பகுதியில் 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் பயன்படுத்திய தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், பல வரலாற்றுச் சான்றுகள் புதைந்துள்ளதால் இந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நடத்தியதின் முடிவு என்னானது? ஏன் இதுவரை இதுகுறித்த அறிக்கை சமர்பிக்கப்படவில்லை? எனக் கேள்வி எழுப்பினர்.
தமிழர் நாகரிகம், பண்பாடு மிக முக்கியமானது. இதில், மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது இல்லை. கீழடி அகழ்வாய்விலும் அதிகாரி இடம் மாற்றம் என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதுபோன்ற நிகழ்வுகளால் தான் மத்திய தொல்லியல் துறை மீது குற்றம்சாட்டப்படுகிறது. எனவே ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு தொடர்பான முடிவுகளை அறிவிக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் சிவகளையில் அகழ்வாராய்ச்சி நடத்தவேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை இயக்குநர்கள் பதிலளிக்கவேண்டும்.
தவறும்பட்சத்தில் தொடர்புடைய தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு சம்மன் பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை பிப்.19-ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.