முன்னாள் பளு தூக்கும் வீரருக்கு கடந்த 44 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படாதது குறித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுவேல்சாமி (69). இவர், தேசிய, மாநில அளவிலான பளுதூக்குதல் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் பெற்றுள்ளார்.
இவருக்கு தமிழக அரசின் விளையாட்டுத் துறை சார்பில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவருக்கு கடந்த 44 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லையாம். இது தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தார்.
மேலும், இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப அவர் உத்தரவிட்டார்.