பிளாஸ்டிக் தடையை மீறினால் ரூ.1 லட்சம் வரை அபராதம்: மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்
சென்னை: தமிழக அரசு விதித்துள்ள தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா, சட்டப்பேரவையில் புதனன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு அரசு விதித்துள்ள தடை கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதனையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முதல்முறை என்பதால் அரசின் தடையை மீறியவர்களுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது. மீண்டும் விதிகளை மீறுவோருக்கான தண்டனை மற்றும் அபராதம் குறித்த எந்த விதமான அறிவிப்பும், தமிழக அரசு வெளியிட்டிருந்த தடை ஆணையில் இடம் பெற்றிருக்கவில்லை.
இந்நிலையில் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் புதனன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதன்கிழமையன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.