வழக்குகள் குறித்து பயமில்லை எனவும், கொடநாடு சம்பவம் குறித்து தொடர்ந்து பேசுவேன் என்றார் காங்கிரஸ் கட்சியின் மாநில தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் முக்கொம்பு மேலணை மதகுகள் உடைந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மீது புகார் கூறியிருந்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இது, அரசுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இது தொடர்பாக நீதிபதி உத்தரவிட்டதின்பேரில் (பிப்.12) செவ்வாய்க்கிழமை ஆஜரானார் இளங்கோவன். அதைத் தொடர்ந்து, அடுத்த விசாரணையை மார்ச் 14-க்கு மாற்றி வைத்து நீதிபதி எஸ். குமரகுரு உத்தரவிட்டார்.
பின்னர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியது :
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு என்மீது வழக்குத் தொடர்வது குறித்து கவலையில்லை. இதுவரையில் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து மட்டுமே பேசி வந்தேன். இனி கொடநாட்டில் நடந்த 5 கொலைகள் குறித்தும் தொடர்ந்து பேசுவேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த வழக்குகளையே சந்தித்த எங்களுக்கு இது பெரிய விஷயமல்ல. எங்களை முடக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் தமிழக புதிய தலைவர் அழகிரியின் செயல்பாடு நன்றாக உள்ளது. பாஜகவின் முயற்சிகள் மக்களிடம் எடுபடாது. மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றார் அவர்.