சென்னை: ஆளுநர்களை தங்கள் சொந்தக் கட்சியின் பொதுச்செயலாளர்களாக பாஜக மாற்றியுள்ளதாக, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி நடத்தும் தர்ணா போராட்டத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்தையும், ஆதரவையும் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆளுநர்களை தங்கள் சொந்தக் கட்சியின் பொதுச்செயலாளர்களாக பாஜக மாற்றியுள்ளதாக, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் பின்வருமாறு:
புதுவை அரசியலில் அசாதாரண சூழலை உருவாக்குவதற்கு துணை நிலை ஆளுநரே காரணமாக இருப்பது அரசியல் சட்டத்துக்கு முற்றிலும் விரோதமானது.
ஆளுநர்களை, பாஜக அரசு தங்கள் சொந்தக் கட்சியின் பொதுச்செயலாளர்களாக மாற்றியிருப்பதற்கு இதுவே உதாரணம்!
ஆளுநர் பதவி தேவைதானா என்கிற கேள்வியே மீண்டும் எழுகிறது
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.