புது தில்லி: புதுச்சேரியில் ஆளுநர் - முதல்வர் இடையேயான அதிகார மோதல் குறித்து புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் கிரண்பேடி, ஹெல்மெட் அணியச் சொல்வது தவறா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, ஹெல்மெட் அணியச் சொல்வது தவறா? ஹெல்மெட் கட்டாயம் என்று உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்துவது தவறா?
மாநில அரசின் நடவடிக்கையில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாகக் கூறுவது தவறு. இது குறித்து நாராயணசாமி எனக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், நேற்று கடிதம் கொடுத்துவிட்டு, உடனே பதில் வரவில்லை என்று தர்ணாவில் ஈடுபடுகிறார்.
ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்குவதில் அரசுக்கு என்ன சிரமம் இருக்கிறது. சாலை விபத்தில் மனைவியை இழந்தவர் முதல்வர் நாராயணசாமி. அவரது மனைவி ஹெல்மெட் அணியாததால்தான் உயிரிழந்தார். தனது மனைவியை இழந்தவர் என்ற அடிப்படையில் அவரே ஹெல்மெட் அணிவதை கட்டாயப்படுத்தாமல், அலட்சியமாக இருக்கிறார் என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார்.