புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் சிவச்சந்திரன் மற்றும் சுப்பிரமணியன் உடல்கள் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த கொடூரமான சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் மிகப் பெரிய சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த தாக்குதலில் தமிழகத்தின் அரியலூரைச் சேர்ந்த சிவச்சந்திரன் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியனும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் தில்லிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் உயிரிழந்த வீரர்களுக்கு இறுதி மரியாதையை செலுத்தினர்.
இதையடுத்து, வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிவச்சந்திரன் மற்றும் சுப்பிரமணியன் உடல்கள் திருச்சி விமான நிலையத்துக்கு தனி விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது.
சிவச்சந்திரன் உடல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்துக்கு ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. கார்குடி கிராமத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க சிவச்சந்திரன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சுப்பிரமணியன் உடல் திருச்சியில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து கயத்தாறு அருகே உள்ள சவலப்பேரி கிராமத்துக்கு தனி வாகனம் மூலம் சுப்பிரமணியன் உடல் கொண்டு வரப்பட்டது. சவலப்பேரி கிராமத்தில் சுப்பிரமணியன் உடலுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து, சுப்பிரமணியன் உடல் அவர் குடும்பத்தின் சொந்த விவசாய நிலத்திலேயே 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.