சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இன்று சனிக்கிழமை (பிப்.16) அதிகாலை சென்னை திரும்பினார்.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்று தங்கி சிகிச்சை பெற்றார். மேல்சிகிச்சை முடிந்து இன்று பிப்ரவரி 16 ஆம் தேதி விஜயகாந்த் சென்னை திரும்புவார் என்று தேமுதிக தலைமை அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் மேல் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.
அப்போது, விமான நிலையத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் விமான நிலையத்தின் வழி நெடுகிலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.