திருச்சி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர்களின் உடல்கள் திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்டன.
புல்வாமா தாக்குதலில் தமிழக வீரர்கள் சிவச்சந்திரன் மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரின் வீர மரணம் அடைந்தனர். அவர்களது உடல்கள் புது தில்லியில் இருந்து இன்று தமிழகம் வந்தது. திருச்சி அருகே உள்ள அரியலூரைச் சேர்ந்த சிவச்சந்திரனின் உடல் மட்டும் திருச்சி விமான நிலையத்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பிறகு, ராணுவ வாகனம் மூலம் அரியலூர் கொண்டு செல்லப்படும்.
தூத்துக்குடியைச் சேர்ந்த வீரர் சுப்ரமணியத்தின் உடல் மதுரை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட உள்ளது.
தமிழக வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருச்சி விமான நிலையம் வந்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் வைக்கப்பட்ட வீரர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
வீரர் சிவச்சந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் பழனிசாமி அரியலூர் மாவட்டம் கார்குடி செல்கிறார்.
வீர மரணம் அடைந்த சுப்ரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரி செல்கிறார்.