தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் சிவச்சந்திரன் உடல் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அவரது சொந்த ஊரான கார்குடியில் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
திருச்சியிலிருந்து சிவச்சந்திரனின் உடல் ராணுவ வாகனத்தில் மாலை 4 மணிக்கு அரியலூர் மாவட்டம் கார்குடியிலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி, மக்களவை உறுப்பினர் சந்திரகாசி, சட்டப்பேரவை உறுப்பினர் ராமஜெயலிங்கம் உள்ளிட்டோர், குடும்பத்தினர், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
மாலை 4.15 மணிக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு சிவச்சந்திரனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அவருக்குச் சொந்தமான இடத்தில் மாலை 5.15 மணிக்கு மத்தியப் பாதுகாப்புப் படையினரின் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, திருச்சியிலிருந்து சிவச்சந்திரன் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் வழியில் பொதுமக்கள் அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.