மாவட்ட நிர்வாகமும் கோவை ஜல்லிக்கட்டு சங்கமும் இணைந்து நடத்தும் இரண்டாம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 17) கோவையில் நடைபெறுகிறது.
கோவையில் ஜல்லிக்கட்டுப் போட்டி கடந்த ஆண்டு முதன்முறையாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரண்டாம் ஆண்டாக ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 17) நடைபெறுகிறது.
இதில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காளைகளும், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் இதில் கலந்துகொள்கின்றனர்.
இதற்காக எல் அண்டு டி புறவழிச்சாலையில் செட்டிபாளையத்தில், 30 ஏக்கர் பரப்பளவில் இடம் சீரமைக்கப்பட்டு தயார் செய்யப்பட்டுள்ளது. வாடிவாசல், மாடுகள் காத்திருக்கும் இடம், மாடு பிடிக்கும் பகுதியில் தேங்காய் நார் பரப்புதல், வாகனங்கள் நிறுத்துமிடம், முதலுதவி மையம் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பார்வையாளர் மாட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் தங்க நாணயம், நான்கு ச்கர வாகனம், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட உள்ளன. வீரர்களையும், காளைகளையும் கண்காணிக்க மருத்துவர்கள், கால்நடைத் துறை அலுவலர்களைக் கொண்ட 17 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழு சான்றளிக்கும் வீரர்களும் காளைகளும் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் உள்ளிட்டோர் விழாவைத் துவக்கிவைத்தனர்.