டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும்: இந்தியக் கம்யூ., வேண்டுகோள்
சென்னை: டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஞாயிறு மாலை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசின் படிப்படியான மதுவிலக்கு கொள்கைப்படி, மதுவிலக்கை அமல்படுத்தும் கால அட்டவணை வெளியிட வேண்டும். பணியில் உள்ள டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தும் போது உருவாகும் உபரிப் பணியாளர்களுக்கு அரசின் பிற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் நிரந்தர மாற்றுப்பணி வழங்க வழிவகை செய்யும் அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரை சந்திக்க 19.02.2019 காலை முதல், தலைநகர் சென்னையில் காத்திருக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி 16 ஆம் தேதியில் முதலமைச்சர் கவனத்திற்கு, கடிதம் எழுதியும், அவரது அலுவலகத்தில் இருந்து எந்தத் தகவலும் கிடைக்காததால் போராடுவதைத் தவிர வழியில்லை என்ற நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதாக தொழிற் சங்க தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக பணித் தொடர்ச்சியுடன் பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது முதல் அமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.