மக்களவைத் தேர்தலில் திமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது என்றார் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை.
கரூர் சனப்பிரட்டியில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட கரூர் தொகுதியைத்தான் கேட்டுள்ளேன். எப்போதும் அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சிதான் நாட்டின் பிரதமர் யார் என்பதை முடிவெடுக்கும். அந்தச் சூழல் திமுகவிற்கு இல்லை. வரும் தேர்தலில் தமிழகத்தில் திமுகவால் ஒரு தொகுதியைக்கூட வெல்ல முடியாது.
உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்ததால்தான், அதை மனதில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஸ்டாலின் சென்று உங்கள் தேவை என்னவென்று கேட்கிறார்.
உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துதான் அவர் சுற்றுப்பயணம் செய்கிறாரே தவிர வரும் மக்களவைத் தேர்தலை மனதில் வைத்துக் கிடையாது. எனவே அந்த கட்சிக்கு யார் இந்த நாட்டின் பிரதமர் எனச் சொல்லும் அளவிற்கு இருப்பதாகத் தெரியவில்லை.
ஜெயலலிதா மீது வழக்குப்பதிந்து அவரை சிறையில் அடைத்து மன உளைச்சலை ஏற்படுத்தியவர்கள் திமுகவினர். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட காரணம் திமுகதான். அவர்களுக்குத் துணை போனது காங்கிரஸ் என்றார் தம்பிதுரை.