சென்னை: காணாமல் போயுள்ள சமூக ஆர்வலர் முகிலன் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீது விளக்கமளிக்குமாறு, மூன்று மாவட்ட போலீசாருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்ககை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவர் முகிலன். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.இவர் கடந்த 15-ந்தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது ஸ்டெர்லைட் போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த தொடர்பும் இல்லை; போலீஸ் உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்பதற்கான ஆதாரங்களை பத்திரிகையாளர் முன்னிலையில் அவர் வெளியிட்டார். இவற்றை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்திருந்தார்.
அன்றிரவு மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் சென்றார். இரவு 10.30 மணிக்கு நண்பர்களுடன் தொலைபேசியில் பேசிய அவரிடம் இருந்து, அதன் பிறகு எந்த தகவலும் வரவில்லை.
அவர் என்ன ஆனார் என்று தெரியாத காரணத்தால் எழும்பூர் ரெயில்வே போலீசில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில் முகிலன் கடத்தப்பட்டுள்ளார் என்று அச்சப்படுவதாகவும், அவரை ரகசிய இடத்தில் வைத்து துன்புறுத்தலாம் என்றும் சந்தேகம் எழுப்பி இருந்தனர்.
அதேநேரம் முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யயப்பட்டது. இந்த மனுவானது திங்களன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மற்றும் காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், இவ்வழக்கின் மறுவிசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.