சென்னை: புகழ்பெற்ற சி.டி.எஸ் நிறுவனத்திடம் கட்டிட அனுமதி, மின் இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெற அ.தி.மு.க அரசு 26 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் உள்ள காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (CTS) எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் "KITS கேம்பஸ்" கட்டிடம் கட்டுவதற்கும், சிறுசேரியில் கட்டிட அனுமதி, மின்சார இணைப்பு வழங்குதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெறவும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு "26 கோடி ரூபாய்" லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கு, அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்திற்கு உலக அரங்கில் அழிக்க முடியாத பெரும் அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனம் 2.7 மில்லியன் சதுர அடி பரப்பளவில் கட்டிடம் கட்டுவதற்கு, கட்டிட அனுமதி பெறுவதற்காக, அ.தி.மு.க அரசில் உள்ள அதிகாரிகள் கேட்டுப்பெற்ற இந்த லஞ்சத்திற்கு, அந்நிறுவனத்திற்கு இடையில் நடக்கும் வீடியோ கான்பிரன்ஸ் ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த 26 கோடி ரூபாய் ஊழல் ஆதாரங்களின் அடிப்படையில் சி.டி.எஸ் நிறுவனத்தின் இரண்டு உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் வழக்கு தொடரப்பட்டு அந்த அதிகாரிகள் மீது "கூட்டுச்சதி, ஊழல், மற்றும் பொய்யான ஆதாரங்களைத் தயாரித்தது" போன்ற மிகக் கடுமையானதும் மோசமானதுமான குற்றச்சாட்டுக்கள் அமெரிக்க நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு விசாரணையில், தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை அந்தத் தனியார் நிறுவனம் ஒப்புக்கொண்டு விட்டது. அதனடிப்படையில் சி.டி.எஸ் நிறுவனத்திற்கு "25 மில்லியன் அமெரிக்க டாலர்கள்" அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க அரசின் இந்த இமாலய ஊழல் 2012 முதல் 2016ஆம் ஆண்டிற்குள் நடைபெற்றதாக வீடியோ கான்ஃபரன்ஸ் ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. "வெளிநாடுகளில் ஊழல் செய்வதைத் தடுக்கும்" அமெரிக்க சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட இந்த வழக்கு, அ.தி.மு.க ஆட்சியின் "கமிஷன் கரெப்ஷன், கலெக்ஷன்" என்ற ஊழல் ஆட்சியின் முகத்தை தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டிலிருந்து சென்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியிலும் வெளிப்படுத்தியிருக்கிறது. சதுர அடிக்கு இவ்வளவு என ரேட் நிர்ணயித்து கட்டிட அனுமதி வழங்குவதற்கு அ.தி.மு.க ஆட்சி நடத்தும் கொள்ளை சென்னையிலும், தமிழகத்திலும், இந்தியாவிலும் ஏற்கனவே தெரிந்திருந்த நிலையில், இப்போது இறக்கை கட்டிப் பறந்து சென்று அமெரிக்காவிலும் ஆதாரபூர்வமான ஊழல் வழக்கு ஒன்றின் மூலம் தெரிய வந்திருப்பது கேடுகெட்ட இந்த அ.தி.மு.க ஆட்சியால், இங்குள்ள தமிழர்களுக்கும், அமெரிக்காவில் உள்ள தமிழர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டது.
அ.தி.மு.க ஆட்சியில் அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் இந்த ஊழல் நடைபெற்றதாகக் கருத முடியாது. ஏனென்றால், அதிகாரிகளை பணம் வசூலிக்கச் சொல்லி உத்தரவிடுவது அ.தி.மு.க அமைச்சர்கள் தான் என்பது நாடறிந்த உண்மை. ஆகவே, இந்த "26 கோடி ரூபாய் ஊழல்" விவகாரத்தில் அந்த 2012 முதல் 2016 வரையிலான காலகட்டங்களில் பதவியில் இருந்த வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு வைத்தியலிங்கம்' மின்துறை அமைச்சர் திருவாளர்கள் நத்தம் விஸ்வநாதன், பி தங்கமணி மற்றும் சுற்றுப்புறச் சூழல் அமைச்சர்களாக இருந்த திருவாளர்கள் பி.வி ரமணா, எம்.சி சம்பத், தோப்பூர் வெங்கடாசலம், கே.சி கருப்பண்ணன் ஆகியோருக்கு இந்த அமெரிக்கன் டாலரில் நடந்த ஊழலில் நிச்சயம் பெரும்பங்கு உண்டு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி அந்நிய முதலீடுகளை பெறுவதற்கு மகத்தான சாதனையை செய்து விட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளும் அ.தி.முக. அமைச்சர்களும், முதலைமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமியும் அ.தி.மு.க அரசின் இந்த ஊழலினால் - குறிப்பாக ஐ.டி கம்பெனியிடமே பேரம் பேசி 26 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற அமைச்சர்களால் தமிழகத்திற்கு வரும் முதலீடுகளை மட்டுமின்றி - தமிழக இளைஞர்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்புகளையும் தகர்த்துள்ளார்கள்
ஆகவே, தமிழக அரசின் லஞ்ச ஊழல் தடுப்புத் துறை, உடனடியாக ஊழல் வழக்கினைப் பதிவு செய்து, சி.பி.ஐ மற்றும் இன்டர்போல் உதவியை நாடி, அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் தாமதமின்றிப் பெற வேண்டும். அந்த வழக்கில் தாக்கலாகியுள்ள வீடியோ கான்ஃபரன்ஸ் ஆதாரங்களையும் பெற வேண்டும். ஊழல் ஆதாரங்களின் அடிப்படையில் சென்னை மற்றும் சிறுசேரி ஆகிய இடங்களில் சி.டி.எஸ் நிறுவனத்தின் கட்டிட அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் அந்தத் துறை சார்ந்த அமைச்சர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் சிறைத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வெளிநாடுகளுடன் நல்லுறவை வளர்த்து விட்டதாகக் கூறும் மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, இந்த 26 கோடி ரூபாய் ஊழல் ஆதாரங்களையும், அ.தி.மு.கவை அச்சுறுத்தி கூட்டணிக்குப் பணிய வைக்கப் பயன்படுத்திக்கொள்ள எண்ணாமல், நீதி - நேர்மையைக் காப்பாற்றும் நோக்குடன், அமெரிக்க நீதிமன்றத்தில் இருந்து பெற்று தமிழக லஞ்ச தடுப்பு லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு வழங்குவதற்கு அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.