புதுவையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல்வர், அமைச்சர்கள் தொடர் தர்னாவில் ஈடுபட்ட பரபரப்பான சூழலிலும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஆளுநர் மாளிகை வளாகத்தில் மிதிவண்டியில் வலம் வந்து உடற்பயிற்சி மேற்கொண்டார்.
போராட்டத்தையொட்டி, கடந்த 14-ஆம் தேதி தில்லிக்குச் சென்ற ஆளுநர் கிரண் பேடி, வருகிற 21-ஆம் தேதி காலை புதுச்சேரி திரும்பத் திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில், தில்லியில் தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திடீரென புதுச்சேரி திரும்பினார். தொடர்ந்து, மாலை 6 மணி அளவில் தன்னை சந்திக்க வரும்படி முதல்வர் நாராயணசாமிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இருப்பினும், முதல்வர் விதித்த நிபந்தனைகளை கிரண் பேடி ஏற்காததால், பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இந்த நிலையில், சுமார் இரவு 8 மணி அளவில் ஆளுநர் மாளிகை வாராந்தாவில் கிரண் பேடி நடைப்பயிற்சி மேற்கொண்டார். தொடர்ந்து, அவர் அலுவலக ஊழியர்களுடன் சுமார் ஒரு மணி நேரம் மிதிவண்டியில் வலம் வந்து உடற்பயிற்சி செய்தார்.