புதுச்சேரி: உலகம் முழுவதுக்கும் யோகா பொதுவானது, ஆளுநர் மாளிகையில் காகாவும் யோகா செய்கிறது, பூனையும் கூட யோகா செய்வதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவர் பொதுவாக இதைப் பதிவிட்டிருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால்,யோகாவையும் தர்ணாவையும் அவர் ஒப்பிட்டிருப்பதே சர்சையைக் கிளப்புகிறது.
அதாவது, கிரண்பேடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, ஒரு முறை செய்தியாளர்கள் சந்திப்பின் போது தர்ணாவும் யோகாவும் ஒன்றா? என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு எனது பதில், ஆம், உண்மைதான். நீங்கள் எதற்காக அமர்ந்திருக்கிறீர்கள் என்பது மட்டுமே இதில் வேறுபடும். எந்த விதமான ஆசனம் செய்கிறீர்கள்? ஆசனம் செய்யும் போது எந்தவிதமான சப்தத்தை வெளிப்படுத்துகிறீர்கள்? என்பதைப் பொருத்தே அது ஆசனமா? தர்ணாவா என்பது முடிவாகும்.
இங்கேப் பாருங்கள், ஆளுநர் மாளிகை பால்கனியில் இன்று காகம் கூட ஆசனம் செய்து கொண்டிருந்தது. முன்னதாக அங்கேப் போட்டிருந்த விரிப்பில் அமர்ந்து ஒரு பூனையும் ஆசனம் செய்து கொண்டிருந்தது. இதுபோல ஆளுநர் மாளிகையில் தினமும் யாரோ ஒருவர் ஆசனத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறியுள்ளார்.
ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 6வது நாளாக இன்று தர்ணாவில் ஈடுபட்டிருக்கும் நிலையில், தர்ணாவை கிரண்பேடி காக்கா ஆசனத்தோடு ஒப்பிட்டிருக்கிறார். இதற்கிடையே, ஆளுநரின் அழைப்பை ஏற்று இன்று மாலை 5 மணிக்கு பேச்சு நடத்த நாராயணசாமி ஒப்புக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.