சென்னை: அதிமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த சென்னையில் உள்ள கிரவுன் பிளாசாவுக்கு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் வருகை தந்துள்ளார்.
பியூஷ் கோயலுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் வந்துள்ளனர்.
சில மணி நேரத்துக்கு முன்பு இதே கிரவுன் பிளாசா ஹோட்டலில் அதிமுக - பாமக இடையே தேர்தல் கூட்டணிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுக தலைமையில் இணைந்திருக்கும் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தேர்தல் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த பியூஷ் கோயல் ஹோட்டலுக்கு வந்துள்ளார்.
இவர்களுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் தேமுதிக சார்பில் சுதீஷ் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, அதிமுக - பாஜக - தேமுதிக இடையேயான தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது.