சட்டப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர், உதவி பேராசிரியர்களின் கல்வித்தகுதி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் புதன்கிழமை (பிப். 20) தீர்ப்பளிக்க உள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து பேராசிரியர் டி.சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டி.எஸ்.என்.சாஸ்திரி, 32 பேராசிரியர்களை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாகச் சேர்த்து பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு கே.கே.சசிதரன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி நேரில் ஆஜராகி இருந்தார். பேராசிரியர்களுக்கு உரிய கல்வித்தகுதி இல்லை என்பது தெரிந்திருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் விரிவான தீர்ப்பை புதன்கிழமை (பிப்.20) பிறப்பிப்பதாக கூறி உத்தரவிட்டனர்.