அர்ச்சகர்கள் பாதுகாப்புக்காக, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு பல்வேறு மாநில, மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு தினமும் சிறப்பு அபிஷகேம், ஆராதனை உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.
அண்மையில், தனியார் நூற்பாலையில் பணியாற்றி வந்த வெங்கடேசன் என்ற அர்ச்சகர், தனது விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று கோயில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர், சுவாமிக்கு மாலை அணிவிக்கும் போது, கால் இடறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, அர்ச்சகர்கள் நிற்கும் பகுதியில் இரும்பு தடுப்பு வேலி அமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. உதவி ஆணையர் ரமேஷ் உத்தரவின்பேரில், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான பணிகள் நிறைவடைந்ததையடுத்து, திங்கள்கிழமை இரவு தடுப்பு வேலி பொருத்தப்பட்டது. தற்போது அர்ச்சகர்கள் பயமின்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரப் பணிகளை செய்கின்றனர்.