போராட்டம் காரணமாக மதுரை சர்வதேச விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை சர்வதேச விமானநிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைசூட்டக் கோரி தேவர் சமுதாய அமைப்புகள் மதுரையில் இன்று கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி மதுரையில் இன்று கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பெரும்பாலான உணவகங்கள், தேநீர் கடைகள் அடைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் காய்கறி சந்தை, பழக்கடை சந்தைகளும் அடைக்கப்பட்டது. மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை அருகே 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் போராட்டம் காரணமாக முன்னெச்சரிக்கையாக மதுரை சர்வதேச விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.