தமிழகத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் உள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து டிஜிபி, உள்துறைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டைச் சேர்ந்த துரைராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, இந்திரா நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி காலை, மாலை நேரங்களில் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக வழிபாடு நடைபெறுவதால் பள்ளி மாணவ, மாணவிகள், முதியோர்கள் கடுமையாக பாதிக்கப்
படுகின்றனர். கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. ஆலயத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவது ஒலி மாசுக் கட்டுபாட்டு விதிகளுக்கு எதிராக உள்ளது. ஆலயத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவது குறித்து 2014ஆம் ஆண்டு முதல் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, இந்திரா நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற உத்தரவிடவேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக டிஜிபி, உள்துறைச் செயலர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர் மனுதாரர்களாக சேர்ப்பதாகக் கூறிய நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களில் உள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி, உள்துறைச் செயலர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.