அதிமுக எம்பி ராஜேந்திரன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகே இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் தொகுதி அதிமுக எம்பி ராஜேந்திரன் உயிரிழந்தார். அவருக்கு வயது 62. விழுப்புரம் மாவட்டம், ஜக்காம்பட்டி வீட்டில் இருந்து அவர் சென்னை புறப்பட்டு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ராஜேந்திரன் எம்பி மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதிமுக எம்பி ராஜேந்திரன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ராஜேந்திரன் இன்று அதிகாலை சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனையும், பெரும் துயரமும் அடைந்தேன்.
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றிய எஸ். ராஜேந்திரன் அவர்கள் கட்சித் தலைமையின் மீது பற்றும், பாசமும், கழக கொள்கைகளின் மீது உறுதியும் கொண்டவர். ராஜேந்திரன் பல ஆண்டுகளாக பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மக்களின் நலன்களுக்காக பாடுபட்டவர். அனைவரிடமும் விருப்பு, வெறுப்பின்றி அன்புடன் பழகும் பண்பாளர். இவர் கட்சியில் பல பொறுப்புகளை வகித்தவர். தொகுதி மக்களின் பேரன்பைப் பெற்றவர். ராஜேந்திரனின் இழப்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும்.
ராஜேந்திரனை இழந்து வாடும் அவரது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், அவரது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜேந்திரனின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.