எந்தப் பெயரில் கூட்டணி என்பதை அதிமுக தலைவர்களே முடிவு செய்வார்கள் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே அதிமுக இணைந்து செயல்பட வேண்டுமென கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், சென்னையில் அதிமுக சார்பில் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை அமைச்சர் டி.ஜெயக்குமார் சந்தித்துக் கூறியது:
தேமுதிகவுடன் கூட்டணியில் இழுபறி இல்லை. முடிய வேண்டிய நேரத்தில் முடியும். எல்லாம் நல்லதாக நடக்கும். அகில இந்திய அளவில் அதிமுக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. மெகா கூட்டணி அமைக்க முடியுமா என எதிர்க்கட்சியினர் நினைத்தார்கள்.
அதிமுக தலைமையில்தான் மெகா கூட்டணி அமையும் என நாங்கள் கூறி வந்தோம். இயற்கையான, மக்கள் நலக் கூட்டணியாக அமைந்துள்ளது. நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற கோஷத்தை முன்வைத்துள்ளோம். அதிமுக தலைமையிலான கூட்டணியே வெற்றிக்கூட்டணி. எனவே, நிச்சயம் வெற்றிக் கனியைப் பறிக்கும்.
பயத்தில் ஸ்டாலின்: தேர்தல் பயத்தின் உச்சத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளார். என்ன செய்வது, ஏது செய்வது எனத் தெரியாமல் தெளிவில்லாமல் இருக்கிறார். அரசியல் ரீதியாக விஜயகாந்தை சந்திக்கவில்லை எனக் கூறியுள்ளார். அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. இதனை ஸ்டாலினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து விட்டோம். பலம் பொருந்திய மெகா கூட்டணியாக அமைந்துள்ளது. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வருவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த முயற்சிகளைத் தடுக்க எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி: அதிமுக மாபெரும் இயக்கம். தொடக்கத்தில் இருந்தே அதிமுக தலைமையில்தான் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. கூட்டணிக்கு பெயர் கொடுத்து எந்தத் தலைமை என்பதை கட்சித் தலைமையே முடிவு செய்யும் என்றார் அமைச்சர் டி.ஜெயக்குமார்.