சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்ச் 4-இல் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்களின் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில் நாட்டியாஞ்சலி விழா வருகிற மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்களின் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில் நாட்டியாஞ்சலி விழா வருகிற மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் நாட்டியாஞ்சலி விழாவானது கபிலா வாத்ஸ்யாயன், ஆர்.நாகசாமி உள்ளிட்ட சிதம்பரம் நகரைச் சேர்ந்த கலை ஆர்வலர்களால் 1981-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த விழா 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி அறக்கட்டளை மூலம்  நடத்தப்பட்டு வந்தது.
சிதம்பரம் நடராஜர் கோயிலை பொதுதீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, 2015-ஆம் ஆண்டு முதல் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை தில்லை நாட்டிய அஞ்சலி  டிரஸ்ட் என்ற பெயரில் கோயில் பொதுதீட்சிதர்கள் நடத்தி வருகின்றனர். அதன்படி நிகழாண்டு,  தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில் நாட்டியாஞ்சலி விழா வருகிற மார்ச் 4-ஆம் தேதி மகா சிவராத்திரியன்று தொடங்கி 5 நாள்களுக்கு நடைபெறுகிறது. இதுதொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விழா தொடக்க நாளன்று சிவராத்திரியை முன்னிட்டு, மாலை 4 மணிக்கு நாட்டியாஞ்சலி தொடங்கி மறுநாள் அதிகாலை 5 மணி வரை நடைபெறும். மற்ற நாள்களில் தினமும் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை நாட்டியாஞ்சலி நடைபெறும்.
தொடக்க நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பத்மா சுப்பிரமணியம் பங்கேற்று பரதநாட்டியம் ஆடுகிறார். விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள் என்று தெரிவித்தனர்.
விழா ஏற்பாடுகளை டிரஸ்ட் தலைவர் எஸ்.வி.நவமணி தீட்சிதர், துணைத் தலைவர் எஸ்.சிவசங்கர தீட்சிதர், பொருளாளர் ஜெய.நடராஜமூர்த்தி தீட்சிதர், நிர்வாகிகள் ஆனந்த தாண்டவ தீட்சிதர், ஹோம.விஜயபால தீட்சிதர், ஜே.சிவசெல்வ தீட்சிதர், பொதுதீட்சிதர்களின் செயலர் ஜே.என்.நடேஸ்வர தீட்சிதர், துணைச் செயலர் ஜி.பி.மகாதேவ தீட்சிதர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
கின்னஸ் சாதனை முயற்சி: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில் "நடேசர் கவுத்துவம்' என்ற தலைப்பில் கின்னஸ் உலக சாதனை முயற்சியாக 10 ஆயிரம் நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட நாட்டிய நிகழ்ச்சி மார்ச் 3-ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி 30 நிமிடங்கள் நடைபெறுகிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.முருகேசன் நாட்டிய நிகழ்வை தொடக்கிவைக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com