தஞ்சாவூர், பிப். 24: எத்தனை அணிகள் வந்தாலும் ,திமுக - அதிமுக அணிகள் இடையேயான தேர்தலாகத்தான் வருகிற நாடாளுமன்றத் தேர்தல் அமையும் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.
தஞ்சாவூரில் திராவிடர் கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
மூன்றாவது அணி உருவானாலும் வலிமை மிக்கதாக இருக்காது. எத்தனை அணிகள் வந்தாலும், இரு துருவ அணிகளாகத்தான் தேர்தலைச் சந்திக்கும் நிலையைப் பெற்றிருக்கிறோம். தற்போதைய நிலையில் திமுக - அதிமுக அணிகளுக்கு இடையேயான தேர்தலாகத்தான் இத்தேர்தலும் அமையும்.
இதில், திமுக தலைமையிலான அணி கொள்கையுடையது. அதிமுக அணியில் முற்றிலும் முரண்பாடு கொண்ட கட்சிகள் சேர்ந்து தேர்தலைச் சந்திக்க உள்ளன.
ஏற்கெனவே அந்த அணியில் பாஜக இடம்பெற்றுள்ளதால், மத்திய அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ள சூழலில், அதிமுக அணி மேலும் பலவீனத்தை அடைந்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான வகையில் கடந்த 5 ஆண்டுகளாக மோடி தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. வளர்ச்சி, மாற்றம் எனக் கூறிய மோடி, கார்ப்பரேட் வளர்ச்சிக்குத்தான் உதவினார்.
கார்ப்பரேட்களின் வாழ்க்கை வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், நாடு வளர்ச்சி அடையவில்லை. சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றார் திருமாவளவன்.