கோவை: அதிமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகரும் அக்கட்சியின் மாநில துணைத்தலைவருமான ரஞ்சித் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
தமிழ் திரைப்படங்களில் நாயகனாக நடித்த ரஞ்சித் ஓராண்டுக்கு முன்பு பாமகவில் இணைந்தார். அவருக்கு உடனேயே மாநில துணைத்தலைவர் பதவி அளிக்கப்பட்டது.
விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாமக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது
இந்நிலையில் அதிமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஞ்சித் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது கூறியதாவது:
கடந்த வாரம் வரை முதல்வருக்கு எதிராக பேசிவிட்டு, தற்போது அவர்களோடு கூட்டணி வைப்பது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கூட்டணி தொடர்பாக பா.ம.க. தலைமை தொண்டர்களிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை, ஆனால் தொண்டர்களை சந்தித்துதான் கூட்டணி அமைக்கப்பட்டது என அன்புமணி கூறியதாய் எண்ணி சிரிப்புதான் வருகிறது.
அமைச்சரவையில் உள்ள பெரும்பாலான அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்களை கூறிவிட்டு இப்பொது எப்படி அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்கலாம்?
மதுவுக்கு எதிராக தீவிரமாகப் போராடி விட்டு மதுக்கடைகளை நடத்துவோரிடம் கூட்டணி வைப்பது என்பது ஏற்க கூடியது கிடையாது.
இளைஞர்கள், பொதுமக்களை எல்லாம் நொடிப்பொழுதில் பா.ம.க. ஏமாற்றி விட்டது
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.