
மாணவிகளிடம் பாலியல் பேரம் நடத்திய புகாரில் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கை ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலர் சுகந்தி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, அதே கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். தற்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தில் மதுரை காமராஜர் பல்கலை.யைச் சேர்ந்த உயரதிகாரிகள் பலருக்குத் தொடர்புள்ளது. ஆனால், அவர்களது பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகப் பேராசிரியை நிர்மலா தேவி மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் யாருக்காக மாணவிகளிடம் அவ்வாறு பேசினார் என்பது குறித்து போலீஸார் விசாரிக்கவில்லை. உயரதிகாரிகள் எனும் ஒற்றை வார்த்தையில் சுருக்கிவிடும் போலீஸார் அவர்கள் யார் என விசாரிக்கவில்லை. பல்கலைக்கழகப் பதிவாளர், வேந்தர், துணைவேந்தர், உயர்கல்வித்துறை செயலர், உயர்கல்வித்துறை அமைச்சர் என அனைவரும் உயரதிகாரிகள் என்ற பட்டியலுக்குள் வரும் நிலையில், அந்த உயரதிகாரி யார் என்று கூறவோ, அவர்களிடம் விசாரிக்கவோ இல்லை. சிபிசிஐடி போலீஸார் கண்துடைப்பு நடவடிக்கையாக விசாரணை நடத்தி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். எனவே, நிர்மலாதேவி வழக்கை சிபிசிஐடி வசமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும். அதுவரை ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் நிர்மலாதேவி வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை. நிர்மலா தேவி மற்றும் அவருக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களை வைத்து விசாரணையை முடித்துள்ளனர். ஆனால் நிர்மலா தேவி மாணவிகளிடம் பேசிய ஆடியோவில் உயர் அதிகாரிகள் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் சிபிசிஐடி போலீஸார் இதனை வேண்டுமென்றே கருத்தில் கொள்ளாமல், நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி உள்ளிட்ட மூன்று பேரை வைத்தே வழக்கை முடிக்க நினைக்கின்றனர். எனவே, விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு ஓராண்டு ஆகப்போகிறது. மேலும், அனைத்து விசாரணையும் முடிந்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் நிர்மலா தேவிக்கு ஏன் இன்னும் ஜாமீன் அளிக்கவில்லை. அவரை வெளியே விடுவதில் அரசுக்கு என்ன பயம்? அவர் மாணவிகளிடம் கூறிய உயர் அதிகாரிகள் உயரதிகாரிகள் யார்? அவர்களிடம் விசாரணை ஏதும் நடத்தபட்டதா?
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சந்தானம் குழுவின் அறிக்கையில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது? என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையில் நீதிமன்றத்துக்கு திருப்தி இல்லை என்பதால், நிர்மலாதேவி வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு சிபிஐ, சிபிசிஐடி, நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.