பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய விமானி அபிநந்தனை பத்திரமாக மீட்க வேண்டும் என்று, அவரது உறவினர்கள், சொந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அபிநந்தனின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்துள்ள திருப்பனமூர். அங்கு வசிக்கும் அவரது உறவினர் கவுத்தி தேவகுமார் உள்பட பலர் அவரை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அபிநந்தனின் தாத்தா சிம்மகுட்டி இந்திய விமானப் படை விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியராக இருந்துள்ளார். அவரது தந்தை வர்தமான் பிரான்ஸ் நாட்டில் விமானியாக வேலை பார்த்துவிட்டு, பின்னர் இந்திய ராணுவத்தில் விமானியாக பணியாற்றினார்.
இவரைத் தொடர்ந்து அபிநந்தனும் இந்திய விமானப் படையில் விமானியாக சேர்ந்தார். அபிநந்தனின் குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக விமானப் படையில் விமானிகளாக இருந்து நாட்டுக்கு சேவை செய்து வருகின்றனர் என்றும், அபிநந்தனின் தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.