இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதையடுத்து தமிழக கடலோரப் பகுதிகளில் கடற்படையினரும், கடலோரக் காவல் படையினரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியதையடுத்து இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியக் கடலோரப் பகுதிகளில் கடற்படையும், கடலோரக் காவல் படையும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருப்பதாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் இது குறித்த விவரங்களை அவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.
தென்னிந்தியாவில் கல்பாக்கம் மற்றும் கூடங்குளத்தில் அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருவதால் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்த இலக்குகளை குறி வைத்துத் தாக்கலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக படகில் வந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தியதும், அதில் பலர் கொல்லப்பட்டதும் நினைவு கூரத்தக்கது.
இது தொடர்பாக ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி டி.வெங்கட்ரமணி கூறுகையில், இந்திய கடலோரக் காவல் படையினர் எந்தவித அச்சுறுத்தலையும் சமாளிக்கும் வகையில் உஷார் நிலையில் உள்ளனர். கடலோரக் காவல் படையினர் தீவிர ரோந்துப் பணியிலும் ரேடார் மூலம் கண்காணிக்கும் பணியிலும் தீவிரக் கண்காணிப்பில்
ஈடுபட்டுள்ளனர்.
கடல் பகுதியில் ஆஸ்திரேலியா முதல் தென்னாப்பிரிக்கா வரையிலான பகுதியில் கண்காணிக்கும் திறமை பெற்றது நமது கடற்படை. எனவே எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் நிலையில் கடற்படை தயாராக உள்ளது எனத் தெரிவித்தார்.