தேவேந்திரகுல வேளாளர் எனப் பெயர் மாற்றம் செய்வது குறித்த கோரிக்கையை ஆய்வு செய்ய அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை பிறப்பித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடர் இனப் பிரிவுகளில் உள்ள குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், பள்ளன் ஆகிய ஆறு பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளர் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை தமிழக அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.
இக்கோரிக்கை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சட்டத் துறை செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், ஆதிதிராவிடர் நல இயக்குநர் உறுப்பினர்-செயலராகவும் இருப்பர். இந்தக் குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தனது செய்தியில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதிய தமிழகம் கோரிக்கை: தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்யக் கோருவதற்கான கோரிக்கையை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்து எழுப்பி வருகிறார். இந்தக் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் அதனை ஆய்வு செய்வதற்காக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.