தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனக் காப்பாளர் பணியிடத்துக்கு 726 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக வனத் துறையில் காலியாக உள்ள 300 வனவர், 726 வனக் காப்பாளர்கள், 152 ஓட்டுநர் உரிமத்துடன்கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை மொத்தம் 2.10 லட்சம் பேர் எழுதினர்.
இதில், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களின் விவரங்கள் கடந்த ஜனவரி 21-இல் வெளியிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து, தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதித் தேர்வு சென்னையில் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையும், பிப்ரவரி 21-ஆம் தேதியும் நடைபெற்றது.
726 பேர் தேர்வு: இதில், தகுதிபடைத்த 726 பேர் வனக் காப்பாளர் பணியிடத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த விவரம் www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு விரைவில் பணி நியமண ஆணை வழங்கப்பட்டு, பணிக்கான பயிற்சி அளிக்கப்படும் என தமிழ்நாடு வனத் துறை சீருடைப் பணியாளர்கள் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.