கலைஞருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்: அனைவருக்கும் நன்றி கூறி ஸ்டாலின் அறிக்கை

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு, தொடர்புடைய அனைவருக்கும் நன்றி கூறி திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 
கலைஞருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்: அனைவருக்கும் நன்றி கூறி ஸ்டாலின் அறிக்கை

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு, தொடர்புடைய அனைவருக்கும் நன்றி கூறி திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வாழ்ந்த நாள்களில் பாதி நாள்களுக்கும் மேல், தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து தொடக்கம் முதல் இறுதிவரை விவாதங்களில் ஒவ்வொரு நாளும் அன்று புதிதாக வந்த உறுப்பினரைப் போலப் பேரார்வத்துடனும் துடிப்புடனும் பங்கெடுத்து, அவையின் நடவடிக்கைகளுக்கு உயிரோட்டம் தந்து, "மக்கள் பணியே, மகேசன் பணி" என்ற இலட்சியத்திற்காக இடையறாது தொண்டாற்றிய வாஞ்சைமிகு தலைவர் கலைஞருக்குப் பேரவையில் இன்று (03.01.2019) இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ஏராளமான திட்டங்கள், எத்தனையோ சட்டங்கள், கணக்கில் அடங்காத உதவிகள், சலுகைகள், பல்வேறு பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், திரும்பிய பக்கம் எல்லாம் பள்ளிகள், கட்டடங்கள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் என அமைத்து கோட்டம் முதல் குமரி வரை தமிழகத்தை நிர்மாணித்த நவீன சிற்பி தான் தலைவர் கலைஞர் அவர்கள்.

சிலருக்கு கனவுகள் இருக்கும்; ஆனால் அதனை நிறைவேற்றும் பதவிக்கு அவர்களால் வரும் வாய்ப்பு இருக்காது. சிலர் பதவிகளை அடைவார்கள்; ஆனால் அவர்களுக்கு தொலைநோக்குச் சிந்தனைகள் இருக்காது. தொலைநோக்குச் சிந்தனையும் சீரிய கனவும் அவற்றை மெய்ப்பட வைத்து, செயல்படுத்திக் காட்டும் பொறுப்பும் பதவியும் அதிக ஆண்டுகள் தலைவர் கலைஞருக்கே வாய்த்தது. 

அத்தகைய தலைவர் கலைஞரின் மறைவையொட்டி, இரங்கல் தீர்மானம் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், அவர் பெருமையைப் போற்றிப் பேசிய மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு துணை முதலமைச்சர், மாண்புமிகு சபாநாயகர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவரும் கழகப் பொருளாளருமான அண்ணன் துரைமுருகன், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் திரு கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர் திரு முகமது அபுபக்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு தனியரசு, திரு. தமீமுன் அன்சாரி ஆகியோருக்கு, திமுக தலைவர் என்ற முறையிலும் கலைஞரின் மகன் என்ற தனிப்பட்ட முறையிலும் தலைதாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர் கலைஞர் அவர்களின் மறைவையொட்டி, பல்துறைச் சான்றோர்கள் பங்கேற்ற புகழ் வணக்க நிகழ்வுகள் நாடெங்கும் நடந்தன. அந்த வரிசையில் இன்று பேரவையில் நிறைவேறிய இரங்கல் தீர்மான நிகழ்வு தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றுவிட்டது. 

இவ்வாறு அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com