தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தனர்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர் பழனிசாமியை அவரது கிரீன் வேஸ் இல்லத்தில் வைத்து சந்தித்தார். இந்த சந்திப்புக்கு குறித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், முதல்வருடனான சந்திப்பில் கூட்டணி குறித்து ஏதும் விவாதிக்கப்படவில்லை என்றார்.
அவர் மேலும், திருவாரூரில் தேர்தலை சந்திக்க ஸ்டாலினுக்கு உள்ளுக்குள் பயம் இருக்கிறது என்றார்.
இடைத்தேர்தல் குறித்து பேசுகையில், இடைத்தேர்தலை காட்டிலும் மக்களவைத் தேர்தலில் அதிக கவனம் செலுத்துவதே எங்களது நோக்கம். திருவாரூர் இடைத்தேர்தல் நடந்தாலும் நடக்கலாம், நடக்காமலும் போகலாம் என்றார்.
இதைத்தொடர்ந்து, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் முதல்வரை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து முதல்வரிடம் பேசினேன். அரசியல் குறித்து எதுவும் அவரிடம் பேசவில்லை. திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து பாஜக மாநிலத் தலைவர் தான் முடிவு செய்யவேண்டும். முதல்வருடன் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி குறித்து மட்டுமே பேசினேன். கஜா புயலுக்கு மத்திய அரசு ரூ.1146 கோடி வழங்கியிருக்கிறது என்றார்.