சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் பேருந்து போக்குவரத்து சேவையை விரிவுபடுத்தும் நோக்கில், புதிதாக 555 பேருந்துகளின் சேவைகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.
புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதன் விவரம்:-
தமிழகத்தில் போக்குவரத்துத் துறையின் மூலமாக 21 ஆயிரத்து 678 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் போக்குவரத்து சேவை மூலமாக 1.74 கோடி பேர் பயன்பெற்று வருகின்றனர். மேலும், புதிய பேருந்துகள், வழித் திட்டங்களை துவக்கி வைப்பது, புதிய பணிமனைகள், அலுவலகக் கட்டடங்கள், இணையதள முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதிதாக 555 பேருந்துகள் திங்கள்கிழமை இயக்கி வைக்கப்பட்டன.
555 புதிய பேருந்துகள்: பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 56 பேருந்துகளும், விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்துக்கு 82 பேருந்துகளும், சேலத்துக்கு 112 பேருந்துகளும், கோவைக்கு 140 பேருந்துகளும், கும்பகோணம் கழகத்துக்கு 102 பேருந்துகளும், மதுரைக்கு 63 பேருந்துகளுமாக மொத்தம் 555 புதிய பேருந்துகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.