நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, திருப்புனவாசலைச் சேர்ந்த 4 மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றனர். படகு சேதமடைந்த நிலையில் நடுக்கடலில் தவித்த அவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டுசென்றனர்.
இந்நிலையில், கோட்டைப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து காரைநகர் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அவர்களை வரும் 10 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்தடுத்த நாட்களில் 8 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டது புதுக்கோட்டை பகுதி மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.